பசப்புறு பருவல் 4
Pasa4

4 பசப்புறு பருவல் !!
பல வருடங்கள் கழித்து மாடிப்படியில் எங்கோ கிளம்பி சேலையில் ரெடியாகி வரும் வைஷ்ணவியை பார்த்து தாயும் தகப்பனும் அதிர்ந்து போய் பார்த்தனர்..
எங்கம்மா போற வைசும்மா? என்ற தாய்க்கு பதில் சொல்லவில்லை, தகப்பனின் கார் சாவியை எடுத்துக் கொண்டிருக்க ஏதாவது விபரீத முடிவு எடுத்து விடுவாளோ என்று பயம் எப்போதும் அவர்களுக்கு உண்டு... ஒருவர் மாற்றி ஒருவர் அவளை கண்கொத்தி பாம்பாக பார்த்துக் கொண்டே தான் இருப்பார்கள்..
"சாகணும்னு நினைச்சிருந்தா, அவர் என் வாழ்க்கையை விட்டுப் போன அன்னைக்கே செத்திருக்கலாம்... சாகணும்னு நினைச்சிருந்தா அவர் இன்னொரு பொண்ணுக்கு தாலி கட்டின அன்னைக்கே நான் செத்துருக்கலாம், சாகணும்னு நினைச்சிருந்தா, என் புள்ள போன அன்னைக்கே செத்திருக்கலாம் ... சாகணும்னு நினைச்சிருந்தா அவர் ஜாடையில புள்ள பெத்து வச்சு வளர்க்கும் போதே செத்திருக்கலாம்... சோ, சாக எனக்கு பல வழி இருக்கு சாக மாட்டேன் "என்று விட்டு போகும் மகள் பேச்சில் எச்சில் விழுங்கினர்..
இன்று மறப்பாள், நாளை மறப்பாள் என்றாவது சரியாகி விடுவாள் என்று காத்திருந்து காத்திருந்து வருடங்கள் கழிந்ததே தவிர அவள் முகத்தில் இருக்கும் இறுக்கம் இன்னும் இன்னும் கூடியதே தவிர குறைய மறுக்கிறது இப்போதும் கூட ஏதோ யோசனை நிறைந்த முகத்தோடு தான் போய்க்கொண்டிருந்தாள்..
பிரபல மனநல மருத்துவமனையில் மருத்துவருக்காக காத்திருந்தாள் வைஷ்ணவி..
வைஷ்ணவி மேடம் உங்கள கூப்பிடுறாங்க என்றதும் உள்ளே போனவள்...
போன்ல பேசி இருந்தீங்களே?
ஆமாம் மேடம் நான் தான் .. என்று அமர்ந்தாள்
"சொல்லுங்க ... "வைஷ்ணவி தலையை குனிந்தே இருந்தாள் கண்கள் கண்ணீரை சொரிந்து கொண்டே இருந்தது, எப்படி தொடங்க தயக்கம் அவள் தொண்டையில்
"சும்மா சொல்லுங்க வைஷ்ணவி...
"அவர் கூட இருந்த அந்த ராத்திரி என்ன துரத்துது டாக்ட்டர் அவர் அணைப்புக்கு ஏங்க வைக்குது, அவர் தொடுகைக்கு ஏங்க வைக்குது .. அவர் காதலுக்கு பேயா அலைய வைக்குது, அவர் தள்ளி தள்ளி போக போக அவர் எனக்கும் வேணும்னு ஆசையா இருக்கு டாக்டர் "என்று முகத்தை மூடி கொண்டு கதறினாள்..
எனக்கும் வாழ ஆசையா இருக்கு மேடம் ஏன் என்ன விட்டுட்டு போயிட்டார் அவ்வளவு தானா எனக்கும் அவருக்குமான உறவு ?? என்றவள் உடலே நடுங்கியது... அவனை விட்டு கொடுத்து விட்டாள் ஆனால் துரத்தும் நினைவுகளை என்ன செய்ய???
இது எத்தனை பெரிய பேராசை!! இருந்தும் ஆசையை தடுக்க முடியாது வந்து இங்கே விழுந்தாள்... இரவுகள் எல்லாம் அந்த ஒற்றை நாள் தந்த இதம் அவளை பதற வைக்கிறது , கூச வைக்கிறது நினையாதே நினையாதே என ஓட ஓட நினைவுகள் அவளை விரட்டுகின்றனவே!!
எத்தனை நாளா இப்படி தோணுது வைஷ்ணவி...
"அவரை எப்போ எல்லாம் மறக்கணும்னு நினைக்கிறேனோ அப்ப எல்லாம், என் மண்டைய வலிக்க வைக்கிற மாதிரி அவருடைய அந்த ஒரு நாள் நினைவுகள் என்ன பாடா படுத்துது... அவர் எனக்கானவர் இல்லை, வேண்டாம் அதை நினைக்காத அசிங்கம்ன்னு பல தடவை எனக்குள்ள நான் கத்தி கூப்பாடு போட்டுட்டேன் ... பட் , என்னால முடியல ... அவர் என் கூட இருந்த அந்த ராத்திரி எனக்கு சொர்க்கமா இல்ல அவர் எனக்கு விட்டுட்டு போன நரகமா தெரியல... அவருக்கு நினைவுகளில் இல்லாத அந்த கூடல் என்னையே ஏன் இப்படி ஒவ்வொரு நாளும் இம்சை பண்ணதுன்னு தெரியல.. இன்னொரு வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்க அவர நான் இப்படி ரகசியமா ரசிச்சு அவர் கூட இருந்தது நினைக்கிறது தப்புன்னு புரிஞ்சாலும் என்னால் அதில் இருந்து வெளியே வர முடியல டாக்டர் ... ஏன் எனக்கு மட்டும் இந்த கதி... ஏன் என்ன விட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணி, என்கூட வாழ்ந்த வாழ்க்கையை அவ கூட வாழ்றார்.. எனக்கு குழந்தை கொடுத்த மாதிரி, ஏன் இன்னொருத்திக்கும் குழந்தை கொடுத்தார் அவளுக்கு எல்லாம் இருக்கு எனக்கு எதுவுமே விட்டுட்டு போகலன்னு அவர் மேல கூட சில சமயம் கோபம் வருது.... ஆனா இது எல்லாத்துக்கும் காரணம் நான்தானேன்னு பல்லைக் கடிச்சிக்கிறேன், ஆனா எத்தனை நாள் எனக்குள்ள இருக்கிற இந்த டிப்ரஷன் , அவருடைய நினைவுகள் கட்டுப்படுத்தி வைக்க முடியும்னு எனக்கு தெரியல ... எங்க அவரு வாழ்க்கையில என்னால புயல் வந்துருமோன்னு பயமா இருக்கு டாக்டர்... நான் இதிலிருந்து எப்படியாவது மீண்டு வெளியே வரணும், எனக்காக இல்லைன்னாலும் எங்கேயோ சந்தோசமா வாழ்கிற அவருக்காகவாவது நான் எதுவும் அவர் வாழ்க்கையில் பிரளயம் பண்ணிட கூடாது... இந்த நினைவுகளை விட்டு அவரை விட்டு எப்படியாவது என்னையை வெளியே கொண்டு வந்துடுங்க டாக்டர் "என்று கை கூப்பி நின்ற பெண்ணை பரிதாபமாகத்தான் பார்க்க முடிந்தது..
காதலை எப்படியாவது என்னை விட்டு எடுத்து விடுங்கள் என்று கெஞ்சும் காதலியை இப்போதுதான் பார்க்கிறார் இதயத்தை விட்டு சிலர் நினைவுகளை எடுப்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா??
"அவர மட்டுமே நெனச்சுக்கிட்டு இருக்கிறதுனால தான் உங்களுக்கு அவரை மறக்க முடியல வைஷு, பேசாம கொஞ்சம் கூட்டை உடைச்சுட்டு வெளியே வாங்களேன்.. அவர் நினைவுகளை டைவர்ட் பண்ணுங்க
புரியல"
"கொஞ்சம் எங்கேயாவது போங்க , இல்லை உங்க அப்பா கம்பெனியில வேலை பாருங்க ... இப்படி தனிமையா அடைஞ்சே கிடந்தா, மறுபடியும் மறுபடியும் அவருடைய நினைவுகள் உங்களை அமுக்கிக்கிட்டே இருக்குமே தவிர , அதுல இருந்து மீண்டு வரவே முடியாது.. அந்த அறையை விட்டு முதல்ல வெளியே வாங்க, கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் ... ஆனா இதுதான் இனி உங்க வாழ்க்கைன்னு புரிஞ்சுக்கோங்க... அவர் இனிமே உங்க வாழ்க்கைக்குள்ள வரவே முடியாது என்கிறத மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கோங்க .. காதல் தோல்வி வாழ்க்கை தோல்வி இல்லை அது ஒரு பார்ட் அதை யோசிக்காம இருக்கிறதை யோசிக்கலாமே..
எங்க போனாலும் என்னால அவரே மறக்க முடியுன்னு தோணல டாக்டர் ... "
"அதைவிட வேற பெட்டர் வழியில்லை வைசு ,கடந்தே தீரணும் அவர் இன்னொரு பொண்ணுக்கு சொந்தம் இன்னொரு பிள்ளைக்கு அப்பா ...
"ம்ம் புரியுது டாக்டர், எனக்காக இல்லனாலும் அவர் குடும்பத்துக்காக அவருக்காக , அவர் நல்லதுக்காக என்ன மாத்திக்க ட்ரை பண்றேன்...
குட் , இதுல டிப்ரஷனுக்கான மாத்திரை தூக்க மாத்திரை இருக்கு எப்பவாவது மனக்குழப்பம் ஜாஸ்தியா இருக்கும்போது அரை மாத்திரை போட்டுட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க... குழம்பி இருக்குற மூளை சரியாகிடும் என்று அவளை அனுப்பி விட்டார் ...
காதல் திருமணத்தில் முடிகிறதோ இல்லையோ மனப்பிறழ்வில் கொண்டு வந்து விட்டுவிடுகிறது, இந்த காதல் தேவைதானா?? என தோன்றும் போது காதல் எனும் ஆட்கொல்லி நோய் உடலெங்கும் பரவி விடுகிறதே என்ன செய்ய ??
வகுப்பறையில் வகுப்பு நடந்து கொண்டிருந்தது முதல் இருக்கையில் உட்கார்ந்து இருந்த ரிதன்யாவுக்கு படபடவென்று வந்தது...நித்தம் ஒரு ஆடையில் வரும் ரிதன்யா இல்லேயே அவள் ... துணியை துவைச்சு போடலாமா என்றே இப்போது தான் அவளுக்கு தெரியும் ... ஒருமுறை போட்ட ஆடையை மறுமுறை போடாதவள் துணியை துவைச்சு அவளே ஐயர்ன் பண்ணி நீட்டாகதான் வருவாள்...
அவள் வாழ்க்கை இப்படி எல்லாம் மாறும் என்று அவள் கணவா கண்டாள்... அரண்மனை வீட்டு வாரிசாக வித விதமான கார் பைக் என்று காலேஜுக்கு போன ரிதன்யா எங்கே?? இப்படி அரசு பேருந்துக்கு காத்திருந்து , ஒரு அரசு வேலை கிடைத்து விடாதா என்று அதற்காக படித்து பாடுபட்டு, அண்ணன் அனுப்பும் பணத்தில் மிச்சம் பிடித்து தனக்கானதை வாங்கி அதிலும் சேமித்து அதற்கும் அண்ணனிடம் ஆயிரம் கணக்கு சொல்லி பத்து பைசாவுக்கு கூட கணக்கு கேட்கும் அண்ணனிடம் பல்லை கடித்து இந்த வாழ்க்கை தேவையா என்று நினைத்தாலும் ... தன்னை சுற்றி தன்னைக் கவனிக்க யாருமே இல்லை என்கிற ஒரு வருத்தமும் அவளுக்கு இப்போதெல்லாம் தன்னை பலவீனம் ஆக்குவது போல் உணர்ந்தாள்...
ஐந்து வருடத்தில் எல்லாத்தையும் கடக்க பழகி கொண்ட அவளுக்கு அந்த காதல் ஏமாற்றத்தில் இருந்து மீளத்தான் முடியவில்லை
ஏமாத்ததிட்டானே, அவனா என்ன ஏமாத்தியது ??
எணணனையோ ஆணின் காதல் பார்வையில் தப்பித்து ஓடத்தெரிந்த அவளுக்கு திராவிட அழகில் நீண்ட உயரத்தில் காரில் கையை கட்டி கொண்டு அவளை மட்டுமே பார்த்து கொண்டே நிற்கும் அந்த பார்வை அந்த பார்வை அதில் விழுந்தாளே, எத்தனையோ காதல் கனவுகள் உண்டு ஆனாலும் அவன் தள்ளி நிற்க ,இவளும் தள்ளி நின்று தானே காதலித்தாள் தோளில் சாய்ந்தால் தள்ளி விடுவான் கையை பிடித்தால் நாசுக்கா உதறுவான்..
இதுதான் ராய் லவ்
ப்ச் எனக்கு பிடிக்கல ரித்து...
ப்ச் ஒரு ஹக்காவது பண்ணுங்களேன் .. உடல் அழுத்தாது ஒரு அணைப்பு கொடுப்பான் அதுவே அவளை உயர்த்தில் பறக்க வைக்குமே...
அவன் பணக்காரன் என்றது கூட ஓகே,.நம்ம காதலுக்காக பொய் சொல்லி ஏமாத்திட்டான் என்று அதையும் ஏற்று கொண்டு தான் போயிருப்பாள் .... ஆனால் உன்ன காதலிக்கிற மாதிரி நடிச்சா பணம் தருவேன்னு சொன்னாங்க என்றானே , தைரியமான பெண்ணான அவளே உடைந்து போனாள் , முகத்தில் அந்த வலியை காட்டி கொள்ளவில்லை என்பதற்காக அவளுக்கு வலிக்க வில்லை என்று அர்த்தம் இல்லை ...
ராயனை இன்று கண்டதிலிருந்து கை விரல்கள் எல்லாம் ஆடியது...
"நான் என்ன தப்பு பண்ணினேன் ,இப்படித்தான் வளரணும், இப்படித்தான் வாழணும்னு இதுதான் கெத்துன்னு என்ன வளர்த்துட்டாங்க.. நான் அப்படித்தான் வாழ்ந்தேன், ஆனா எந்த இடத்திலையும் நான் அவரை பொய்யா காதலிக்கலையே, ஏமாத்திட்டு போயிட்டாரே அஃப்ட்ரால் பணத்துக்காக , அவர் தங்கச்சியோட வாழ்க்கைக்காக, அவர் நல்லா இருக்கணும் என்பதற்காக , என் கூட எப்படி காதல்னு சொல்லி ஏமாற்ற முடிஞ்சது.....இவனை நம்பி காதலிச்ச நான் முட்டாளா?!... ஏமாற்றுக்காரன் எவ்வளவு தைரியமா என் கண் முன்னாடியே வந்து நிக்கிறான்... எனக்கு மட்டும் சான்ஸ் கிடைச்சிருந்தது கையால அவன் குடல கிழிச்சு போட்டு இருப்பேன் ... கொஞ்சம் கூட உறுத்தல் இல்லாமல் டிப்டாப்பா வந்து நிக்கிறான் ...
"வேலை கிடைச்சிருச்சாம் பெரிய வேலை அவன பாத்தாலே எரிச்சலா வருது, இனிமே இந்த பஸ்லையே வரக்கூடாது சாமி என்று நகத்தைக் கடித்துக் கொண்டு ரித்விகா அமர்ந்திருந்தாள்
மனம் ஆறவே இல்லை நம்பியவர்கள் நேசித்தவர்கள் போலி என்று அறியும் வேளை எவனாக எவளாக இருந்தாலும் உடையத்தான் செய்வார்கள்.. அவளும் அன்று உடைந்தவள் தான் இன்னும் அந்த உடைபட்ட கண்ணாடி சேரவே இல்லை ..
கலராய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் பணக்காரன் உண்மையா காதலிக்க மாட்டான் இந்த கூற்றையெல்லாம் கண்டுபிடித்தவன் எவன் என்று தெரியவில்லை தாஜ்மஹால் உருவாக காரணமே மாமன்னன் ஷாஜகான் தான்.. பணத்திற்கும் காதலுக்கும் சம்மந்தம் இல்லை உண்மையாக இருப்பவன் எல்லா இடத்திலும் உண்மையாக இருப்பான்..
அவளுக்குள் காயம் உண்டு என்று பார்க்க யாருக்கும் நேரமும் இல்லை, காலமும் இல்லை அவள் காயங்கள் அப்படியே வடுவாக நெஞ்சுக்குள் கிடந்து அமுக்கிக் கொண்டுதான் இருக்கிறது...
காயத்தை கொடுத்தவனே அந்த காயத்தை ஆற்றினால் தவிர அந்த காயம் ஆறப் போவது இல்லை ... அவனைத்தான் உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாளே எங்கிருந்து காயம் ஆற்ற ?
ஒரு வாரமாக முன்னமே வரும் பஸ்ஸில் ரிதன்யா போய்விட்டாள்.... இன்று அந்த பஸ்ஸூம் நொடியில் போய்விட காலை உதைத்தாள்..
ப்ச் பஸ் போயிடுச்சே அந்த பஸ்ல போகணுமா அவள் போகும் பஸ் போய்விட இனி,வரும் பேருந்தில் ராயன் வருவான்... போகவா வேண்டாமா என யோசனை மத்தியில் பேருந்து வந்து நிற்கவும் ரிதன்யா பஸ்ஸில் ஏறி கண்ணை உருட்ட அங்கே வேறு நடத்துனர் நின்றார்..
எப்பாடா!! அவன் இல்லை என்று பெருமூச்சு விட்ட ரித்து டிரைவர் பக்கம் இருந்த இடத்தில் நின்று கொண்டாள்
"என்ன அண்ணன் ராயன் இன்னைக்கு ஆப் போல" என்று கண்டக்டரிடம் டிரைவர் கேட்க
"ஆமா தம்பி ஏதோ பொண்ணு பார்க்க போறதா நேத்து சொல்லிட்டு இருந்தார்
"ராயனுக்கா ??
"ஆமா போல பொண்ணு ஹவர்மெண்ட் ஸ்கூல் டீச்சராம் ....
ஓஓஓஓ நல்ல பையன் நல்லா வாழ்ந்தா சரிதான்
"நல்ல பையனா என்ன ஏமாதினவன்" நின்று கொண்டிருந்த ரித்துவுக்கு புஸ்புஸ் என்று மூச்சு வந்தது ...கேட்ட சுகசெய்தி அவளுக்கு பிடிக்க வில்லை என்பதை அவள் சினத்தில் சிவந்து போன முகமே சொன்னது ..
சீக்கிரம் கல்யாணம் வைக்கணும்னு அம்மா ஆசை படுது போல ... "
"ஓஓஓஓ ஆமா அவனுக்கும் வயசு இருக்கும்ல தங்கச்சி கல்யாணம் அது இதுன்னு எல்லாம் அவனே தானே முடிச்சான்.. பாவம்தான் அத்தனை பாரத்தையும் தோள்ல தூக்கி போட்டு செஞ்சு முடிச்சு இப்பதான் அவனுக்குன்னே யோசிக்கிறான்" அவனை பற்றி ஆஹா ஓஹோ பேச்சு ரசிக்கவில்லை ஆயிரம் நல்லது செஞ்சாலும் அவளுக்கு அவன் கெட்டது தான் செய்தான், எல்லோருக்கும் நல்லவன் தான் அவளுக்கு கெட்டவன்தான் ..
"போர்ஜரி என்ன ஏமாத்திட்டு நீ கல்யாணம் பண்ணி செட்டில் ஆக போறியா ? அவன் வழிக்கே போக கூடாது என்று நினைத்த அவள் குரங்கு மனம் இங்க தாவியாச்சு....
"பொண்ணுக்கு எந்த ஊராம் ??? அவள் காதை தீட்டி பதிலுக்கு ஆர்வமாக இருக்க
கும்லா தான்
" அடுத்த ஸ்டாப்ல வருமே அதுவா
"ஆமா ஆமா ... ஏதோ டீக்கடைக்காரர் பொண்ணாம்
எம்மா எந்த ஊர் போகணும் என்ற கண்டெக்கடரிடம் காசை கொடுத்த ரித்து
"அண்ணன் ஒரு கும்லா கொடுங்க" என்று அப்பெண் ஊருக்கு டிக்கெட் எடுத்து கொண்டாள் ...
வாழ விட்டா பாருடா , என்று ரிதன்யா நகத்தை கடித்து கொண்டே இறங்கி விறுவிறுவென அந்த ஊரை நோக்கி நடந்தாள் ....
தன் வாழ்க்கையை தோல்வி அடைய செய்த அவன் வாழ்க்கையை தோல்வி அடைய வைக்க வேண்டும் என்ற வெறி....
ஏமாற்றம் எனக்கு
சுக வாழ்வு உனக்கா??
எல்லாரும் ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட வேண்டும் என்று அவசியம் இல்லையே ... எனக்கு வலி உனக்கு இன்பமா உன் கண்ணை புடுங்கிறேன் , அதுவாவது என் உளப்புண் ஆற்றுமா என்று பதிலுக்கு பதில் செய்வதால் அவள் கெட்டவளும் இல்லையே..